
காட்டுமன்னார்கோவில் முட்டம் – மயிலாடுதுறை குத்தாலம் ஆகிய ஊர்களை இணைக்கும் வகையில் பாலம் கட்டுவதற்கு கடந்த 2006ஆம் ஆண்டு ஒப்புதல் பெறப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கடந்த 06ந் தேதி பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின். மிக்க மகிழ்ச்சி. இந்த பாலம் கட்டப்பட்டால் நமக்கு மயிலாடுதுறை செல்வதற்கு ஏறக்குறைய 25 கி.மீ. தூரம் மிச்சமாகும். மேலும் நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதிகளிலிருந்து வரும் அனைத்து சென்னை பேருந்துகளுக்கும் இந்த வழியே தூரம் மிக குறைவு. எனவே சென்னை செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை நமது ஊரில் அதிகரிக்கும். இதுமட்டுமில்லாமல் ஜெயங்கொண்டம் பகுதி பழூரிலும் ஒரு பாலம் கட்டப்பட்டு அந்தப் பாலமும் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் பேருந்துகளுக்கு திறந்து விடப்படுகிறது. இதனால் நாம் தஞ்சாவூர் செல்வதற்கு இனி இந்தவழியை உபயோகிக்கலாம். இதில் ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால், அணைக்கரை பாலத்தை இனி கண்டுகொள்ளமாட்டார்கள் என்று நினைக்கிறேன். அணைக்கரை பகுதியில் அந்த 2 கி.மீ தூரமும் இனி நிரந்தரமாக பேருந்தே செல்லாதா? அதையும் கவனித்தார்கள் என்றால் அந்தப் பகுதி மக்களும் பயனடைவார்கள். செய்வார்கள் என்று நம்புவோம். இந்தப்பாலம் கட்ட அடிக்கல் நாட்டியதில் நம் பகுதிக்கு ஒரு உடனடி பலன் உண்டாயிற்று. துணை முதல்வர் வந்ததால் சேத்தியாத்தோப்பு – காட்டுமன்னார்கோவில் சாலை ஒழுங்காக போடப்பட்டு பளிச்சென்று காட்சியளிக்கிறது. நேற்று நான் காட்டுமன்னார்கோவில் செல்லும்போது மிகவும் ஆனந்தமாக இருந்தது. வீராணம் ஏரியின் அழகைப் பார்த்துக்கொண்டே பளிங்கு சாலையில் செல்வது ஆனந்தம் இல்லாமல் வேறென்ன? இதற்காகவாவது தமிழக முதல்வரும், துணை முதல்வரும் எப்போதும் தமிழ்நாடு முழுதும் சுற்றிக்கொண்டேயிருந்தால் நல்லது. அவர்கள் வரும்நாள் மட்டும் சிறிது கெடுபிடிகள் இருந்தாலும் அப்புறம் முழுதும் நமக்கு லாபம்தானே!
***** ## ***** ## *****

நமது ஊரில் ஒரு பெரிய நகைச்சுவை. இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. ஆங்கிலம் முதல்தாள் தேர்வில் பறக்கும் படை என்று சொல்லிக்கொண்டு பரதூரை சேர்ந்த ஒருவன் தே.கோ.ம.மேல்நிலைப்பள்ளியில் நுழைந்து ஆய்வு செய்திருக்கிறான். இதற்கு முன்பே சந்திரா பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் சென்று ஆய்வு செய்துவிட்டு வந்திருக்கிறான். வந்தவன் அப்படியே சென்றிருக்க வேண்டும். தே.கோ.ம. மேல்நிலைப்பள்ளியிலும் நுழைய, உண்மையிலேயே வந்த பறக்கும்படை ஐயப்பட்டு அவனை விசாரிக்க வகையாக மாட்டிக்கொண்டான். நாங்கள் விசாரித்த வரையில் அவன் தன் பெண் தோழிக்காக(?) வந்தான் என்று தெரிகிறது. எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா!
***** ## ***** ## *****

நித்யானந்தர் செய்தியில் சன் தொலைக்காட்சி காட்டிய ஆர்வமும் அவசரமும் ஆச்சரியப்பட வைக்கிறது. அனைத்து மக்களும் பார்க்கும் ஊடகம் என்று சிறிதளவு கூட எண்ணாமல் ஏதோ நீலப்படம் ஓடும் தியேட்டர் போல் அரைமணிக்கு ஒருமுறை திரும்பத் திரும்ப ஒளிபரப்பி செய்திகள் பார்க்கும் அனைவருக்கும் ஒரு தர்மசங்கடத்தை உருவாக்கிவிட்டது. கண்டித்தவர்கள் அனைவருக்கும் நீங்கள் ஏன் அதையே பார்க்கிறீர்கள் என்ற எதிர்கேள்வி வேறு சில நக்கல் ஆசாமிகளால் எழுப்பப்பட்டது. பரபரப்பான செய்தி எனும்போது அனைவருக்கும் பார்க்கவேண்டும் என்ற இயல்பு தானாகவே வரும். அப்படி பார்க்க நினைக்கும்போது இந்த காட்சிகள் வீட்டில் உள்ள அனைவரையும் நெளிய வைத்தது. நல்லவேளையாக, அவர்களுக்கு முறையான குட்டு வைத்த தமிழக முதல்வர் அவர்களை பாராட்டவேண்டும். தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு காட்டும் முக்கியத்துவத்தை கொஞ்சம் தமிழீழ மக்களின் அவலங்களிலும் காட்டியிருந்தால் தமிழகத்தில் இன்னும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும். அனைத்தையும் வியாபாரமாக பார்க்கும் ஊடகங்கள் என்று திருந்துவார்களோ!
***** ## ***** ## *****

நண்பர் ஒருவர் தனது மடிக்கணினியில் புது மென்பொருட்களை பதிவு செய்ய அளித்திருந்தார். பதிவுசெய்து முடித்து ஆன்ட்டி வைரஸ் மென்பொருளை பதிவு செய்தேன். ஆன்ட்டி வைரஸிற்குத் தேவையான புது கோப்புகளை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யவேண்டியிருந்தது. அப்படி பதிவிறக்கம் செய்யும்போது பக்கத்து கணிப்பொறியில் உட்கார்ந்துகொண்டு ஒருவர் நித்யானந்தா சம்மந்தமான கோப்பை பதிவிறக்கம் செய்து பார்த்துக்கொண்டிருந்தார். அதனால் ஆன்ட்டி வைரஸ் மெதுவாக பதிவிறக்கம் ஆனது. உடனே நண்பர் பக்கத்தில் இருந்தவரிடம் “நான் முதலில் ஆன்ட்டி வைரஸை டவுன்லோடு செய்துகொள்கிறேன். பிறகு நீங்கள் வைரஸை டவுன்லோடு செய்துகொள்ளுங்களேன்!” என்று கூறினார். அவ்வளவுதான்! சிரித்து அடங்க வெகுநேரமாயிற்று. நண்பரின் சாமர்த்தியத்தை மிகவும் பாராட்டினேன்.
***** ## ***** ## *****
4 comments:
வைரஸ் - ஆண்டி வைரஸ்.. செம கலக்கல் கமெண்ட்!
சகோதரா,
உண்மைதான்...ஊடக விபசாரம் மிகவும் கேவலம்.
இதில் மிகவும் அசிங்கமாய் நடந்து கொண்டது "நக்கீரன்" மற்றும் சன் தொலைக்காட்சி.
நக்கீரன் இதில் ரூ.20 லட்சம் கள்ளா கட்டியதாக
தகவல்.(நீலப்படம் ஒளி பரப்பி)
நொறுக்குத்தீனி அருமை சேத்தியா தோப்பு
parakkum padai matter superappu ... antha aaalukku sema thunichaldaan. athai vidunga namma school emmam mokkaiyaaga irukku.. oru id checking koodavaa illa.. ipave kanna kattuthe..!
கருத்துரையிடுக